Wednesday, May 27, 2009

ஒரு நாள் இனிவரும்....


நீ என உறுதிப்படுத்த 

தேவைப்பட்டது 

உன் இறப்பிற்கான சான்று.

நீயில்லையென 

நம்ப மறுக்கின்றன 

சுதந்திரத்திற்கான 

வேள்வியின் கண்கள.

வல்லூறுகளின்

மேற்பார்வையில் 

இனவெறியை   

கட்டவிழ்த்து 

வன்புணர்ச்சியில் 

வாகை சூடியது 

ஓநாய் கூட்டம்.

பாதுகாப்பு அரணில் 

தூங்கும் எமை 

எரியூட்டுபவனோடு 

வாழ இயலுமோ 

உடன்படிக்கை இட்டு.

மௌன சாட்சியாய் 

உறையும் எம் விழிகளில் 

உயிருடன் 

வாழ்கிறாய் நீ.

யாரோ நகர்த்தும் 

சூதாட்டக் காய்களில

துறைமுகங்கள் விற்று

சிம்மாசனம் பிடித்த

அவர்களின் தலை

வெட்டப்படும் ஒரு நாள். 

Tuesday, May 26, 2009

காற்று வெளியிடை....


கருக்கு பட்டயம்சூழ்

குருத்தோலைக்கிடையே 

மரப்பாச்சிகளைப்போல் 

முகம்காட்டினோம், 

விடலைப் பெண்ணின்

எலும்புகள் கிளைக்கும்

பருவம்போல் முகிழ்த்தன

பச்சை மார்பகங்கள்

வானம் அளைந்து

வீழும் நட்சத்திரங்களை

இலைகளால் உயிர்த்தோம்

மூத்த ஓலைகள்

வீழும்போது

வயதின் வரியை

எழுதி உதிர்ந்தன

சுண்ணம் பூசிய

பானைகள் பொருத்தி

குருத்துகள் சீவி

கள் சேர்க்கும்

சொள்ளமுத்துநாடார்

எங்கள் ராஜகுமாரன்

பாம்படம் அணிந்த

நகோமிபாட்டியின

நினைவுகள் சுமந்த 

எங்கள் தண்டுவடம்

சுவாசித்தன

காற்றுவெளியிடை

காதலின்

ஈரவரிகளை..! 

Friday, May 8, 2009

இரவு பகல் கடந்து


இமைகளை அழுத்தியது 
நகரத்தின் வெம்மை, 
சேர்ப்பிக்க வேண்டியதை 
சேர்த்துவிட்டு 
இமைமூட வேண்டும், 
வாகனம் விரையாத 
சாலையின் ஓரத்தில். 
கானல் காற்றின் 
சாட்டை சொடுக்கி 
பயணித்தேன் 
புரவியின் விரைவாய் 
இரு சக்கர வாகனத்தில். 
விற்காத பொருட்கள் 
திறக்காத கதவுகளுக்கானது. 
சந்தேகிக்கும் பார்வைகளினூடே 
மறுக்கப்படுகிறது, 
தாகம் தீர்க்கும் நீரும் 
இலவசமாகத் தரும் எதுவும். 
பேரம் நடக்கிறது 
படியாத தொகைகளில் 
ஜன்னல்களின் கம்பிகளூடே 
ஆண்களின் அரவமற்ற வீடுகளில் 
இரவுபகல் திரைவிலக்கி 
பயணிக்கிறோம் 
வியாபாரம் முடியும்வரை...

விருட்சம்


வானளாவியது 
வீட்டுக்குள் அடங்கியது 
கிளைத்த கிளைகளை 
வெட்டி வெட்டி. 

கூழாங்கல்லில் 
வேர்பாவி 
வளர்ந்தது மரம், 
சொட்டு நீர் பாசனம். 

கட்ட இயலாத 
விழுதகளில் ஆடியது, 
கடவுளின் மரஊஞ்சல் 
பூஜை அறைகளில். 

ஊசிகள் பாய்ந்த 
தண்டுகள் வளர்ந்தது 
தொட்டிகள் உடைக்காமல் 
குட்டை ரக மரங்கள். 

அசோக மர 
பச்சை நிற பூச்சரம் பற்றி 
பம்பரக் காய்கள் பற்றி 
பாட்டியின் கதைகள். 

வானளாவிய 
விருட்சங்களின் விதை 
அரசின் இரகசிய 
குளிர் சாதனப் பெட்டிகளில் 
உயர் ரக ஒட்டு மரங்கள். 

ஓடும் விலங்கு 
பறக்கும் பறவை 
கணினியின் 
குறுந்தகடுகளில், 
அறிவியல் பாடம். 

கைகளில் சுமந்தபடி 
காட்டினாள் ஆசிரியை 
இதுதான் மரமென்று ,
போன்சாய் மரம். 

வீழும் கட்டிடங்களின் 
பூகம்ப உழவுக்காய் 
காத்திருந்தான் 
விதவிதமான 
விதைகளோடு 
கடவுளின் தூதன்...

Wednesday, April 29, 2009

ஆதியின் நிழல்


யாருமறியாத
கருக்கலில்
முகமிழந்த நாம்,
சொல்லப்படாத
வார்த்தைகளுக்காய்
மெளனம் பகிர்ந்தோம்.
அடைபட்ட துயிலின்
முற்றங்களில்
நிலாவின் ஒளியருந்தி,
உன்னில் நானும்
என்னில் நீயும்
மொட்டவிழ்ந்த
அன்பின் நீர் தழும்பலில்,
கண்களில் பூத்தது
ஒளியின் பிரவாகம்.

நம் கனவுகளின்
ஏகாந்த பிரதிமைகளை
ஏற்காத உதிரச்சாயல்களின்
மனச்சுழிவுகளில்,
சோபையிழந்து
நீரின் எதிரெதிர்க் கரைகளில்
வேரறுந்தோம்.

உன் விவாதங்களின்
பொய்பிம்பகுகைகளில்
ஆதிகால மனுஷியாய்,
மொழியடங்கய
மெளனத்தின் குரல்வளை
நீண்டு மெலிந்ததண்டுகளாய்.

என்றேனும்
நீ உணரக் கூடும்
நம் சாயலில் ஒளிரும்
பூவின் இதழ் தொட்டு
பிரகாசிக்கும்
நிலாத்துண்டங்களை!

Monday, April 27, 2009

நடமாடும் வெதுப்பகம்


தானியம் நிறைந்த

மச்சுவீட்டில்

காலைவேளை

சந்திப்புகளில் 

நுரைக்கக் கிடைத்தது

கருப்பட்டிக்காப்பி.

முகம் தெரியாத

மாலைத் தீற்றல்களில் 

அப்பாவுக்குத் தெரியாமல்

கூடி அருந்தின

தேநீர் இனித்தது

திண்ணைக்கடைகளில்

நட்பின் பாலோடு.

நீள் சாலையின் முடிவில்

குறிப்பிட்ட அந்த

தேநீர் கபேதான் 

இலக்கியம் வளர்த்தது

அன்றைய பொழுதின் 

பசி தீர்த்த

நுரை ததும்பும்

நாயரின் டீ.

இரவுப்பொழுதின்

நீண்ட பயணங்களில் 

அதிரும் கானாபாடல்களின் 

பொருள் விளங்குமுன் 

கூடி அருந்தினோம் 

ஒரே பேருந்தில் 

பயணிக்கும் பொருட்டு .

மழைக்கால பயணத்தின் 

குளிரூட்டும் சாரல்களில் 

ஆவி பறக்கும் அனலிடை 

சுக்கின் மணம் சுமந்து 

சுறுசுறுப்பாய் இயங்கும் 

காளான் குடை 

வெதுப்பகம்.

பணியின் நலன் கருதி

குவிக்கப்பட்ட 

அரசு ஆணைகளின் 

பிரதிகளின் நடுவே 

தேடி வருகறது தேநீர்,

இன்றே கையொப்பம் வேண்டி.

இப்போதெல்லாம் 

நடைபாதையினூடே

அவசர கதியில்

மிதிவண்டியில் பயணிக்கும் 

வெதுப்பகத்தில் 

அருந்துகிறோம் தேநீர் 

இணையதள முகவரி 

கைமாறும் நிமிடங்களில்.

கசப்பின் சுவையூடே 

விவாகப் பத்திரிகையுடனான 

அவளின் இறுதி சந்திப்பில் 

நீண்ட கனவு முடிவுற்றதில் 

வார்த்தைகளற்ற மெளனியாய் 

உலகின் முற்று பெறாத 

புள்ளியாய் நான்.

நடமாடும் வெதுப்பகம்

Monday, April 13, 2009

மரவீடுகளின் ஜன்னல்.


மரத்தின்

கூடுகைக்கீழ்

குவிந்துக்கிடக்கும்

தர்பூசணிகளில்

ஒரு துண்டையும்

சுவைக்க இயலாத

காகிதம் சேகரிக்கும்

சிறுவனின்...

நிராசை பற்றி.

வேகங்களில் விரையும் 

அசையா நகரத்தின்

பயணக் குறிப்புகளை

நரம்புகள் தகிக்கும் 

இலை நறுக்குகளில்

காம்புகள் அவிழும்

நொடிகளுக்குள்

பதிவு செய்தது கானல்.

காதறுந்த

பாதஅணிகளின்

கடைவிரித்தலில்

தோல்துளைக்கும்

வெம்மை கடந்து

பரதன் போல்

வீற்றிருந்தான்

பாதுகைகள் பற்றி

வாழ்வன் பசியூடே.

குளிரூட்டப்பட்ட

வண்ணம் பொதிந்த

பனிக் கூழ்

விற்பவனுக்கும்

தாயின் கைபிடித்த

குழந்தைக்கும் 

இடையே கரைகிறது

சங்கேத மொழியின் 

அழைப்பின் ஜில்லிப்பு.

அலகால் கொத்தியுண்ண  

இயலாத அரிசியின்

சீரான ஒழுகலை

தடுக்க இயலாத 

இறக்கையமர்த்தி 

விரையும் வாகனங்களில்

பயணிக்கிறது பசி.

கற்பனைப் பசுமையை 

மெழுகு வண்ணங்களின்

தீற்றலில் கண்டது,

தென்னைமரத்தையே 

கைகளில் தாங்கும்

பாவனையுடன் 

இளநீர் அருந்துகிறது 

மழலையின் கண்கள்.

ஆள் அரவமற்ற 

தெரு முனைச்சந்தை

நேருக்கு நேர் 

கடந்த பின்னும்

தர இயலாத 

கணங்களின் வேர்வையில்

கசிந்தொழுகும்

முதல் காதல் கடிதமும் 

அவளின் ஆடைக்கேற்ற

ரோஜாவின் வாசமும்.

கரிய சிறகுகளை

தீய்ந்தொழிக்கும்

தார்ச்சாலையின் 

நீள் பரப்பில் 

பிராவகமாய்

கானல் நீர்.

வறண்ட அலகுகளில்

நனைந்தூறும் 

ஆளரவமற்ற வளைவுகளில் 

நீர்க்குழாய்களின் 

சொட்டு நீர்க்கசியல்.

அலகுகள் கீறிச்செல்லும் 

நினைவுகளுக்கப்பால்

காதலின் பசியோடு 

அசையும் மரவீட்டின் 

கிளையின் மாடங்களில் 

தலை சாய்த்துப்பார்க்காத 

அவளின் ஒற்றைப்பார்வைக்காய்.

வால் நட்சத்திரம் !


கருவறை வாசம் முடிந்து

கண் திறந்ததும் 

நுழைந்தது இது .

என் இமைக்கூட்டில

இருப்பது தெரியாமல் 

கனவுலகப் புள்ளிகளில் 

பால் மணம் மாறாமல் 

புன்னகை புரிந்தேன் .

கடவுள் பேசுகிறார் 

என்றார் சிலர் 

தத்தி தத்தி 

முற்றம் நடந்த நான் 

இலை நழுவும் 

ஒளிக்கற்றையை 

கையில் பற்ற 

எத்தனித்தேன் 

அகிலத்தின் அணுக்கள் 

குழைந்தோடும் 

ஓலைக்கீற்றின் ஓட்டைவழி 

இறுகப் பற்றியும் 

பிடிக்க இயலாத 

ஒளிவட்டம் தேடி 

அரும்பும் இளமையில் 

எதிர்படுபவர் கண்களில் 

தேடினேன் அதை .

அறிமுகம் இல்லாத

முகத்தின் கண்களில்

மிளிர்ந்தது அது

அதுவே எனதென்று

பற்றி இழுத்து

எனதாக்க முயற்சித்தேன்

வண்ண வண்ண கனவுலகம் காட்டி

எம்பி குதித்த போது

உடைந்து நிறமிழந்து

காற்றுக்குமிழ் போலே 

என் கனவின் மேல்அதிருப்தியுற்று

இழைந்தோடும் அதை

வால்முளைத்து

நீந்தக் கண்டேன்

வேடிக்கை பார்த்த

நீள்வட்ட  நீர் பரப்பில

நீ வேண்டாம் என 

போக்கு காட்டி 

என் சாயலை ஒத்த

கண்கள் விழிப்படிமமானது,

புதிய கனவொன்றின் 

ஒளிபற்றி.

இனி அது நமதல்ல என  

பெருமூச்செய்திய தருணத்தில் 

வழக்கத்தின் காரணமாய் 

அருவமாய் இமைக்குள் 

சிறகுகள் மடித்து 

மணலாய் நெருடிற்று 

கண்ணின் கருவட்டம் 

நீரின் நிழலில் 

அதன் பின்னே அலைந்தது .

பேச மொழியின்றி 

பசிய நீரின் ஆழம் துளைத்து 

ஒளித்தூண்டிலின் 

கரைவந்து 

அது எனதல்லவென 

மெய்யுணர்ந்தபோது 

நானே நட்சத்திர ஒளியானேன் 

உடம்பொடு மெய் நீங்கி.

 

Friday, April 10, 2009

பிரிவின் கதை சொல்லி !


இதுதான்

நான் வளர்ந்த வீடு

புன்னகையோடு

ஆமோதி்த்தாய்

உன் கண்கள்

மினுங்கியது

திராட்சைப்பழங்களாய்

வீட்டின் வெளியெங்கும்

மி்தந்த என் வாசம்

உன் நாசியின்    துளைப்பற்றி

நாம் சல்லாபித்தோம்

நிலாவொளியின் குளுமையில்

உனக்கும் சில வார்த்தைகள்

மீ்த்மிருந்தது 

மெளனத்தின் மீது.

மாவிலை உரசும்

மாடியின் நிழலில்

நட்சத்திர இரவுகளின்

தாயுடன் களித்த 

பால்ய நாட்களை

நினைவூட்டினாய்

உனக்குப்பிடித்த

உன் மாடியின் 

படிக்கட்டுகளை

தாவிக்கடந்தோம்

இரண்டிரண்டாய்

ஒரு விடியலுக்குள்

நாம் பிரிக்கப்பட்டோம்

ஒரு வாரமாய்க்காணாத

என்னைக் கண்டுபிடித்து

பிணைத்தார்கள் சங்கிலியால்

ஆனாலும் நீ பாலூட்டுவாய்

நம் குழந்தைகளுக்கு

பிரிவின் ஈர

கதைகள்  சொல்லி.

Tuesday, March 24, 2009

சிறகுவிதை


சிறகுகள் தீய 
புகையும் நெருப்பினில் 
உயிர் பொசுக்கினாலும்
மீண்டும் வருவேன் 
ஃபீனிக்ஸ் பறவையாய்.

கனவுகள் தீய
கருக்கிப்போட்டாலும் 
கிளை துளிர்ப்பேன் 
வேர்களில் உயிர்த்து.

எரிந்து விழும் 
நட்ச்சத்ததிரங்களுக்கிடையே 
விடி வெள்ளியாய் 
வானில் முளைப்பேன்.

உலர்ந்து விழும் 
சருகுகளுக்கு 
பாடம் சொல்வோம்.,
மெய்ப்படும்வரை 
காண்போம் கனவுகள்.,

அதுவரை 
வீழ்ந்தாலும் 
விதைகளாய் வீழ்வோம்.

Monday, March 9, 2009

தாகத் தீ


தாகத் தீ

காத்திருந்து வாங்கினர் 
கொள்கலனடைந்த
வெடிக்கும் தீயை.

உரசலின் நெருப்பில்
தகித்த 
மூங்கில்காட்டுக்கு 
அவசியப்படவில்லை
சிக்கி முக்கி கல்..!

காலவெளி 
பெருநெருப்பை 
மூடிவைத்தனர் 
மூச்சுக்காற்றில்..!

அடுக்குமாடி குடியிருப்புகள்
ஆலாய் பறந்தன 
அசுரப் பசி தாகத்தில் 
 
பச்சைக் கீரையின் 
கொள்ளை விலையில் 
பசி தீர்த்தன 
கலோரி மாத்திரைகள் 

நீர்க் குழாயில் 
வழிகிறது 
வெள்ளை தங்கம்
 
நீர் வேண்டி 
கைபேசி வழியலறும்
தாகம் தோய்ந்த 
வீடுகளின் நாவுகள்..!

சூரியனைப் பிட்டு 
வெப்பம் விற்கும் 
அணுமின் மனிதன்.

பறக்கும் தட்டுகள்
கொள்ளையிடக்கூடும் 
நிலவிலுறையும் பனியை..

கிரகவாசல்தோறும் 
அழைப்புமணியழுத்த 
முண்டியடிக்கும் 
மனிதவிரல்களின்
ரேகை குவியல்.

மின்கலன் சுமந்த 
என்னிதயத்தில் 
வெட்டவெளியாய் 
பற்றி எரிந்தது 
தாகத்தின் தீ...!

விதிவெல்லும் 
அறிவால் 
உருவாக்கவியலாது 
நதிகளை..!



 



 

Saturday, March 7, 2009

கழுவிச் செல்லும் மழை


கழுவிச் செல்லும் மழை.

கழுகுகளின் மாமிச அலகுகளையும் 
அன்று பிறந்த 
அதன் குஞ்சுகளையும் 
காய்ந்த சுள்ளிகளின் 
திறந்த வெளி வீட்டையும் 
கழுவி செல்லும் மழை.

ஆடையுதிர்த்த மரங்களின் 
சருகுகளை 
தன் அமானுஷ்ய விரல்களால் 
களைந்து காற்றிலடித்து 
மரங்களின் முண்டுகள் தடவி
வழிந்தோடியது மழை 

வானைத் துளாவிய 
ஒற்றடை குச்சிகளின் 
நுனிகளெங்கும் 
ஒரே இரவில் 
பச்சை துளிர்களின் 
மருதாணிப் பதியல்.

மழைப் புள்ளிகளின் 
முத்த மழையில் 
ஆண்டுகளின் அழுக்கு 
கழுவப்பட்டு வீதியெங்கும் 
காலடி கோலங்கள்.

குழைய குழைய 
செம்மண்ணோடு 
மேகமழையில் 
சர்க்கரை பாகு.

கல்லுக்குள் புதைந்த 
தேரைகளின் காட்டில் மழை 
கல்யாண களையோடு 
இரவெல்லாம் கச்சேரி. 

ஓடி வந்த 
நீருக்கு வீட்டை
தந்து விட்டு 
திண்னையில் 
ஒண்டியிருக்கும்..
நானும் என் கவிதையும் 


சுதந்திரமே உன் விலை என்ன..?


நீ..
மூச்சுமுட்டி
அமிழ்ந்து போ..
தினம் தினம் 
கந்தக நெடியில் 
ஒருமுறையாவது 
சுதந்திரம் பற்றி பேசவிடு
என் அண்டைதேசமே..!

நீ அங்கே உயிருக்காய் 
பதுங்கு குழியில் 
பதுங்கும்போது 
நான் இங்கு 
நட்சத்திர ஓட்டலில் 
பீட்சா பற்றி 
யோசிக்க முடியவில்லை..!

தமிழ் பேசிய உதடுகள் 
உறித்தெடுக்கப்படும் என்றால்..,
உங்களின் சிம்மாசனம் 
தமிழனின் எலும்புகளால் 
அழகூட்டப்பட்ட 
பிணமேடு..!

நிர்வாணப் பிணங்கள் 
தமிழ் பேசிய 
பிணம் என்றால் 
கொத்தி தின்னும் கழுகுகளின் 
அலகுகளில் 
புத்தரின் போதனை எதற்கு..?

இனவெறியை 
பச்சயமாக்கிய 
சப்பாத்திக்கள்ளிகளின்
ராஜ்ஜியத்தில் 
ரொட்டி துண்டுகளுக்காய் 
ரத்தம் சிந்தும் தமிழர்கள் 
கொக்கி முள் பழங்களாய்..!

விடியலுக்காய் காத்திருக்கும் 
மரத் தோணிகளில் 
சல்லடையிட்ட குண்டுகளில் 
மரத் துகளோடு 
கொஞ்சம் 
தமிழ் மாமிசமும்...!

கருவறைகளை 
கிழித்தெறியும் 
ஹிட்லர் தனத்தை 
இன்றோடு விட்டுவிடு..
உன் மக்களை 
உலகம் சுற்றும் 
அகதிகளாக்காதே..!

சொந்த நாட்டையே 
கல்லறைத் தோட்டமாய் 
கட்டிவிட உத்தேசிக்கும் 
வெட்டியானுக்கு பெயர் 
அரசாங்கமா..?

ரத்த வெறியாட்டம் 
இன்னும் ஓயவில்லை 
ஈழ சுதந்திரமே 
உன் விலை என்ன..?